ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு
டிடிஎச் சேவை, ஏடிஎம் இணைப்பு, மின் ஆளுமைக்கு பயன்படும் செயற்கைகோள் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது,இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புவிசுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும், செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.